Total Pageviews

Friday, May 25, 2012

சட்டவிரோத படுகொலைகளே இலங்கையின் பிரதான மனித உரிமை மீறலாக அமைந்துள்ளது – அமெரிக்கா

சட்டவிரோத படுகொலைச் சம்பவங்களே இலங்கையின் பிரதான மனித உரிமை மீறல்களாக அமைந்துள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
 
பாதுகாப்புப் படையினர் மற்றும் துணை இராணுவக் குழுக்களினால் இவ்வாறு சட்டவிரோத படுகொலைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
 
2011ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் மனித உரிமை அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
படையினரால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் அரசியல் ரீதியான காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், புலி ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
ஊடகவியலாளர்கள் சுய தணிக்கை அடிப்படையில் தமது பணிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகள் தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது என்பதனை இந்த அறிக்கையின் மூலம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் தெரிவித்துள்ளார்.
 
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மிகவும் சொற்பளவிலான உத்தியோகத்தர்களையே இலங்கை அரசாங்கம் தண்டித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இறுதிக் கட்ட யுத்தத்தி;ன் போது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
காவல்துறையினரின் சித்திரவதைகள், ஊழல் மோசடிகள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் என பல்வேறு உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும், பரவலாக குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சட்டவிரோத மற்றும் பலவந்தமான கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான சில சம்பவங்களுடன் அரசாங்கத்தைச் சார்ந்தோருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இலங்கைச் சிறைச்சாலைகளில் சனநெரிசல் காணப்படுவதாகவும், போதியளவு வசதிகள் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
காவல்துறையினர் திட்டமிட்ட வகையில் நபர்களை கைது செய்து துன்புறுத்தும் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக அமெரிக்க மனித உரிமை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

No comments:

Post a Comment